சேத்தியாத்தோப்பு அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் விஷ வண்டுகள்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு  அருகே ஓடாக்கநல்லூர்  கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் உள்ளே செல்வதற்கும், கிராமத்தின் வழியாக  அருகில் உள்ள நார்த்தங்குடி, தரசூர், விளாகம், டி.நெடுஞ்சேரி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் ஓடாக்கநல்லூர் கிராமத்தின் முகப்பு  வழியை தான் இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என பலரும்  பயன்படுத்தி வருகின்றனர்.

முக்கிய கிராம சாலையாக இருந்து  வரும் நிலையில் இந்த சாலை அருகில் உள்ள பனை மரத்தின் உயரத்தில் காய்ந்துபோன பனை மட்டைகளை கூடாக கட்டி விஷ வண்டுகள் குடியிருந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான அளவில் விஷ வண்டுகள் கூண்டுக்குள் இருந்து வருவதால் அவ்வப்போது  கூண்டை விட்டு வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கும்போது சாலையில்  செல்வோர் மீது கடிக்க ஆரம்பிக்கின்றன.

இதனால் இந்த வழியாக செல்லும் பலரும்  அலறி அடித்துக்கொண்டு ஓடும் நிலை உள்ளது. பலரையும் அச்சுறுத்தி வரும் இந்த  விஷ வண்டுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த  வேண்டும். அல்லது அழிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விஷ  வண்டுகள் கடித்தால் மனிதர்களுக்கு மயக்கம், கொடூரமான வலி அல்லது உயிர் போகும் ஆபத்து ஏற்படும் என பெரியவர்கள் கூறி வருகின்றனர். உடனடியாக மாவட்ட  நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் ஓடாக்கநல்லூர் கிராமத்தின்  முகப்பில்  இருக்கும் பனை மரத்தில் உள்ள விஷ வண்டுகளை அழிக்க வேண்டும் என பல்வேறு  தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Related Stories: