நத்தம் கிராமத்திற்கு நாயக்கர்கள் கொடுத்த அன்னதான மடம் 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு: வரலாற்று சின்னத்தை பாதுகாக்க கோரிக்கை

திண்டுக்கல்: நத்தம் கிராமத்திற்கு நாயக்கர்கள் அன்னதானமடம் அளித்தற்கான கிடைக்கபெற்ற கல்வெட்டினை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் அருகே நத்தம் பாளையக்காரர் லிங்கைய நாயக்கர் அன்னதானமடம் அளித்தற்கான 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர் மற்றும் வரலாறு மாணவர் ரத்தினமுரளிதர் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று குழு ஆய்வாளர் கூறுகையில், ‘‘இந்த கல்வெட்டு 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். இந்த கல்வெட்டில்  உள்ள வாசகங்கள் பட்டையம் ஸ்வஸ்தி ஸிரி சாலி வாகன சகாப்தம் 1571, கலியுகம் 4750, (இதற்கு‌ ஆங்கில ஆண்டு 1649,) தினம் செல்லா நின்ற விரோதி வருடம் கார்த்திகை மாதம் ஐந்தாம் நாள் சோம வாரமும் திருதிகையும் மூலநட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் யாதவ கொக்கி குல காப்பவர் ஆகிய தொந்தி லிங்கைய நாயக்கர் மகன் முத்திலிங்கைய நாயக்கர் அவர்கள் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்க பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம்‌ஆகும்.

அதன் அருகே உள்ள மினங்கு மக குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை விவரம் பூதக்குடி மலை நாளிக்கல் கருங்கல் பாறை இரக்கம் இது ஈசான மூலை (வடகிழக்கு எல்லை )அதன் நேர் கட்டுக்கால்,உசில மரம் இது அக்னி மூலை (தென் கிழக்கு எல்லை)கொங்கான கரை (காட்டு ஓரம்)இது கன்னி மூலை(தென் மேற்கு எல்லை) வாயு மூலை (வட மேற்கு எல்லை)கோப்பையம் பட்டி குளத்து மதகு அன்னதான மடத்திற்கு இந்த எல்லைகள் கொண்ட பள்ளப்பட்டி ஊர் குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்கள் மடத்திற்கு தானமாக வழங்கினார்.

இந்த எல்லைக்கு உள்ளிட்ட இடங்களில் சூலம் குறியிடப்பட்ட 19 அடையாளங்கள் நடப்பட்டுள்ளது இந்நிலங்களில் நஞ்சை புஞ்சையில் அரசு நிர்வாக நிலங்கள் நீக்கலாக புஞ்சை 903  நஞ்சை 23  இவை அஷ்ட போக தேச சுவாமிகள் தனசந்திரர் நிர்வாகிக்கும் தர்ம பரிபாலனம் பண்ணி கொண்டு வருவார் அவருடன்  மற்றவர்களும் பரிபாலனம் பண்ணி வர இக்கல்லையும் மடத்தையும் யாரும் சேதப்படுத்தினால் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவம் வரும் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் கல்வெட்டைப் பற்றி வரலாற்று ஆய்வு குழுவை சேர்ந்த தளிர் சந்திரசேகர் கூறியதாவது:

அன்னதானம் மடத்திற்கு கொடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். லிங்கைய நாயக்கர் மகன் முத்திலிங்கைய நாயக்கர் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்க பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம்‌ ஆகும். இந்த அன்னதானம் மடம் பராமரிப்பின்றி சிதலமடைந்து முற்புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே இது போன்ற பழமையான கல்வெட்டுக்கள் மண்டபங்கள் அன்னதானம் மடம் இது போன்ற பழமையான நினைவுச் சின்னங்கள், ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: