ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் 7 மின் கம்பங்கள் உள்ளன. வரும் மழைக்காலத்திற்குள் பலமாக காற்று வீசும்போது உடைந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு முன்பாக மாற்றி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருப்பவர்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இங்குள்ள சாலையின் வழியாகதான் செல்வது வழக்கம். இதில், இங்குள்ள புதிய காலனி பகுதியில் சாலையின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் உள்ள சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், எலும்பு கூடுகளாக கம்பிகள் வெளியே தெரிந்தும் காட்சியளிக்கிறது. வருவது, மழை காலம் என்பதால் பலமாக காற்று வீசும்போது, மழை நேரத்தில் உடைந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவு உள்ளதால் அடிக்கடி, வயலுக்கு இந்த வழியாக தான் சென்று வருகின்றனர்.