ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில் இன்றும் அதேஅளவில் நீடிக்கிறது. அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1.17 லட்சம் கனஅடி வீதமும் என மொத்தம் 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நீர்இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: