குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி: மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

நாகர்கோவில்: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (90). கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் இடது நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் அழைத்து அவரை நலம் விசாரித்தார். அமைச்சர் மனோதங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி ஆகியோரும் அவரை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் உள்ளிட்டோர் குமரி அனந்தனை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இன்று முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோரும் குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Related Stories: