விக்கிரவாண்டி அருகே உலர்களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சிந்தாமணி கிராமம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையை விவசாயிகள் விளைவித்த பொருட்களை உலர வைக்கும் களமாக பயன்படுத்தி வருகின்றனர். புதிய உலர்களம் அமைத்துத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.விக்கிரவாண்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிந்தாமணி, அகரம் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்ப குதியில் வசித்து வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் மட்டும் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் நெல், எள், கேழ்வரகு போன்ற தானிய பயிர்களை உலர வைக்க உலர்களம் இல்லாததால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்புச் சாலையில் விவசாயிகள் தாங்கள் விளையவைத்த பொருட்களை உலரவைத்து வருகின்றனர். இதனால் இணைப்புச் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அப்படி செல்லும்போது பெரும்பாலானோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உலர்களம் அமைத்துத்தர வேண்டி பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஆகவே தமிழக அரசு விரைந்து அப்பகுதி விவசாயிகளுக்கு உலர்களம் அமைத்துத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: