அமர்நாத் யாத்திரையின்போது ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடைபெற்று வரும் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதனிடையே இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன் பின் வானிலை சீரானதும் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணி அளவில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக குகை சன்னதிக்கு அருகில் தண்ணீர் அதிக அளவில் பெருக்கடித்தது. அங்கு அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது. மேக வெடிப்பில் சிக்கி 5 பேர் உயிரிழந்த தாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற அமைப்புகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.

இந்நிலையில் மேக வெடிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேகவெடிப்பில் உண்டான வெள்ளத்தில் சிக்கி ஏராளமான யாத்ரீகர்கள் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தால் அதை மேக வெடிப்பு என்போம். மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை இந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் யாத்திரையின் போது மேக வெடிப்பு ஏற்பட்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: