இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய மோடியே வெளியேறு கோஷத்துடன் திருப்பூரில் கம்யூனிஸ்ட் மாநாடு: முத்தரசன் பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது மாநாடு பக்ரிபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஒன்றிய அரசு ஜனநாயக, மக்கள் விரோத, குறிப்பாக சிறுபான்மையினரை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தி, அச்சுறுத்தி வருகிறது. அண்டை நாடுகள், நட்புறவு நாடுகள், தோழமை நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தலைகுனிய செய்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்தில் அக்னிபாதை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்று தெரிவித்து வருகிறார். முதலில் பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள தொகைகள், செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும். மிக பெரிய மோசடிக்கு துணை போன மோடி அரசை வரும் ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் திருப்பூர் மாநாட்டில், மோடியே வெளியேறு என்ற கோஷத்துடன், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, ஒரு பெரிய அரசியல் திருப்புமுனையை இந்த மாநாட்டில் ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: