திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்திலுள்ள வள்ளிக்கண்மாயில் நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மீன்களை பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவிற்கு புகழ் பெற்றதாகும். கோடைகால முடிவில் இம்மாவட்ட கிராமங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த பாரம்பரிய விழா தற்போது மீன்பிடி திருவிழாவாக மாறியுள்ளது. திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்திலுள்ள வள்ளிகண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று நடந்தது. இதனையடுத்து நேற்று காலை கிராமத்தார்கள் ஓன்று கூடி வள்ளிலிங்க சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டனர். பின்னர் ஊர் கமிட்டியினர் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றி குடியிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர்.