திருப்புத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்திலுள்ள வள்ளிக்கண்மாயில் நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மீன்களை பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவிற்கு புகழ் பெற்றதாகும். கோடைகால முடிவில் இம்மாவட்ட கிராமங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த பாரம்பரிய விழா தற்போது மீன்பிடி திருவிழாவாக மாறியுள்ளது. திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்திலுள்ள வள்ளிகண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று நடந்தது. இதனையடுத்து நேற்று காலை கிராமத்தார்கள் ஓன்று கூடி வள்ளிலிங்க சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டனர். பின்னர் ஊர் கமிட்டியினர் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றி குடியிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர்.

இதில் வலை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் திண்டுக்கல், மேலூர், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்புத்தூர், மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விழா என்பதால் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 முதல் 8 கிலோ வரை எடை இருந்தது. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற மீன்களும் சிக்கின. 7 வயது முதல் 70 வயது முதியவர் வரை ஆண்கள் பெண்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

Related Stories: