ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்த நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள, தாளவாடி, தொட்டகாஜனூர், சிமிட்டஹள்ளி,பனஹள்ளி, கல்மண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஓடைகள், பள்ளங்கள் மற்றும் வனப்பகுதி வழியாக செல்லக்கூடிய காட்டாறுகளில் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலங்களை செந்நிற மழைநீர் மூழ்கடித்துச் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.