அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்: பயணிகள் கோரிக்கை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சியின் மேற்கே சின்னதாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. கரூர்- திண்டுக்கல் செல்லும் எந்த பேருந்தும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை. கடைவீதி பஸ் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் குறிப்பாக பள்ளி விடும் நேரங்களில் போக்குவரத்து தடைபட்டு அடிக்கடி விபத்து நடப்பதாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சியின் மேற்கே தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், காவல் நிலையம், பல்வேறு வங்கிகள் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளது.

பல்வேறு வேலை நிமித்தமாக அரவக்குறிச்சியின் மேற்கே இந்த அலவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒன்றரை கிமீ நடக்க வேண்டியுள்ளது. அரவக்குறிச்சியின் மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் ஒன்றரை கிமீ நடந்து வந்துதான் கரூர்-திண்டுக்கல் பஸ் ஏற வேண்டும். இல்லையென்றால் ஆட்டோவில்தான் வரவேண்டிள்ளது. இந்த ஆட்டோ கட்டணம் நடுத்தர வர்க்க பொது மக்களுக்கு கூடுதல் பணச் சுமையாக உள்ளதால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி நிர்வாகமாவது பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: