பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு போலீசிடமிருந்து தப்பிய இருவரின் கை, கால் உடைந்தது

* நெல்லை  மருத்துவமனையில் அனுமதி, முக்கிய குற்றவாளியை பிடிக்க பொள்ளாச்சிக்கு தனிப்படை விரைவு

நெல்லை: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நவீன், லெப்ட் முருகன் ஆகியோர் திருச்சியில் போலீசார் கைது செய்தபோது தப்பி ஓடி பெரிய சுவரை தாண்டிய போது கை மற்றும் கால்கள் உடைந்தது. இதையடுத்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு வாகைகுளத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் (30), கடந்த 20ம் தேதி பாளை கேடிசி நகர் ரவுண்டானா ஓட்டல் முன்பாக சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாளை போலீசார் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து ஸ்ரீவைகுண்டம் அய்யப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்து சரவணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நவீன் தலைமையிலான கூலிப்படையினர்தான் கொலையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனால் நவீன் உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தீபக் ராஜனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 7வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான நவீன், லெப்ட் முருகன், லட்சுமிகாந்தன், சரவணன் உள்ளிட்ட 4 பேரை திருச்சி போலீசார் பிடித்தனர். அப்போது லெப்ட் முருகனும், நவீனும் அவர்கள் பிடியில் இருந்து தப்பி சென்றனர்.

அவர்கள் ஒரு பெரிய சுவரை தாண்டி குதித்து ஓடியபோது எதிர்பாராத விதமாக நவீனுக்கு வலது கையும், லெப்ட் முருகனுக்கு இடது காலும் உடைந்தது. தொடர்ந்து நெல்லை தனிப்படை போலீசார் திருச்சிக்கு சென்று அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து நவீன், லெப்ட் முருகன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பொள்ளாச்சியில் பதுங்கி இருக்கும் முக்கிய குற்றவாளி ஒருவரை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். கொலையாளிகள் பயன்படுத்திய சிகப்பு நிற காரை மதுரை மேலூரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் தொடர்புடைய சுரேஷ், பவித்ரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தீபக் ராஜனின் உடலை வாங்க அவரது உறவினர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு போலீசிடமிருந்து தப்பிய இருவரின் கை, கால் உடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: