மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு!!

சென்னை : மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசுஅரசாணை வெளியிட்டது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரமாண்டமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்த பணிகளும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை இந்த ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும்.போட்டியை சிறப்பாக நடத்த ஆலோசித்து பணிகளை செய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: