சென்னை: டெல்டா மாவட்டத்தில் சூறைகாற்றுடன் பெய்த மழையால் திருச்சியில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானது. ஏற்காட்டில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 67 மலை கிராமங்கள் இருளில் மூழ்கின. தமிழகம் முழுவதும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. திருச்சியில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. முசிறி, திருவெறும்பூர், ரங்கம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நேந்திர வாழை மரங்கள் தாரோடு முறிந்து சேதமடைந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் லேசான தூறல் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் கரூர், வெங்கமேடு, காந்திகிராமம், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.