முதியோர் உதவித் தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் அறிமுகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்.!

சென்னை: முதியோர் உதவித் தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார். வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் பதில் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெரும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வருவோம் என அறிவித்தார்.

இதன்பின் பேசிய அவர், ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறேன். சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது, இதனால் செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இ-சேவை மையத்தில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றும் நடப்பாண்டில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும், 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என கூறிய அமைச்சர், அம்மா திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்திலேயே நிறுத்தி விட்டார்கள் என குற்றசாட்டினார்.

Related Stories: