கம்பத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்-ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கம்பம் : கம்பத்தில் கத்தோலிக்க திருச்சபை சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு அகியவற்றை நினைவுபடுத்தும் புனித வாரத் திருவழிபாடுகளின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு தினம் அமைகிறது. இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரிலிருந்து எருசலேம் நகரில், வெற்றியின் அரசராகப் பவனி வந்த நிகழ்வை, நினைவு கூறுவது குருத்தோலை ஞாயிறாகும். கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு நேற்று காலை கத்தோலிக்க திருச்சபை கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பங்கு மக்கள் குருத்தோலை ஞாயிறு கொண்டாடினர். பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸால், புனித நீரில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்திய பீடப்பணியாளர்கள், ஆண்கள், பெண்கள் கம்பம் எஸ்பிஐ வங்கி அருகிலிருந்து கே.கே.பட்டி சாலையில் உள்ள கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். பின் பங்குத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார். இதில், கம்பம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: