டெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ் தனது கட்சியை லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க உள்ளார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் வைத்து ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின் லாலு பிரசாத், மற்றும் சரத்யாதவ் ஆகிய இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். பீகாரில் ஐக்கிய தனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த சரத் யாதவ் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது கட்சி பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.