சித்தூர் பஜார் தெருவில் உள்ள நகை கடையில் வாங்கியது திருட்டுப்போன சில மணிநேரத்தில் 36 கிராம் நகையை மீட்ட போலீசார்

* சி.சி.டி.வி. கேமராவை வைத்து அதிரடி

* உரியவரிடம் உடனடியாக ஒப்படைப்பு

சித்தூர் : சித்தூர் தொலைந்துபோன 36 கிராம் தங்கத்தை சில மணி நேரங்களில் போலீசார் மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் கொடுத்தனர். சித்தூரில் நேற்று இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகாந்தர் கூறியதாவது: சித்தூர் கொங்க ரெட்டி பள்ளி அடுத்த சத்யா நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் நேற்று காலை சித்தூர் பஜார் தெருவில் உள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்று இரண்டரை லட்சம் மதிப்பிலான 36 கிராம் தங்க செயினை வாங்கிக்கொண்டார். பின்னர் அங்கிருந்து தனது மகளின் ஜாதகத்தை பார்ப்பதற்காக பஜார் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு சென்று அங்கு ஜாதகத்தை பார்த்துள்ளார். அப்போது அவருடைய பையிலிருந்த நான்கரை சவரன் தங்கச் செயின் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 உடனடியாக இரண்டாவது காவல் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்தார். புகாரின் மீது வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் எங்கிருந்து வந்தார் என அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவருடைய பையில் இருந்து தங்கச் செயின் கீழே விழுவதை பார்த்து விழுந்த இடத்திற்கு கான்ஸ்டபிள்கள் சதீஷ், கோவிந்த், சுதீர் ஆகிய மூவரையும் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உத்தரவு பிறப்பித்தார்.  

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தொலைந்துபோன நான்கரை சவரன் தங்கச் சங்கிலி சாலையோரம் விழுந்து இருந்ததை பார்த்து செயினை மீட்டனர். பின்னர் புகார் அளித்த குமாரிடம் சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழங்கினார்.இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பாதிக்கப்பட்ட குமாரிடம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் தொலைந்துபோன தங்கச்சங்கிலியை சில மணி நேரங்களிலேயே மீட்டுக் கொடுத்தார். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா, கான்ஸ்டபிள்கள் சுதீர், சதீஷ், கோவிந்த் உடன் இருந்தனர்.

தங்க நகை கடைக்கு தனியாக செல்லவேண்டாம்

நகை விவகாரம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் யுகாந்தர் கூறும்போது, ‘‘பெண்கள் நகை கடைக்கு வங்கிகளுக்கு செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையாக செல்லவேண்டும். தனி நபராக செல்லக்கூடாது. குடும்பத்தில் யாராவது ஒருவரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் சித்தூர் மாநகரத்தில் முக்கிய சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள் சிசி டி.வி. கேமராக்கள் அமைத்துள்ளார்கள் ஒரு சில நபர்கள் சிசி டி.வி. கேமராக்களை பொருத்த வில்லை அவர்கள் மிக விரைவில் அவரவர்களின் கடைகளின் முன்பு சிசி  டி.வி.கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: