புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கும் ஹூண்டாய், கியா, சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் காஷ்மீர் தொடர்பான கருத்துக்கு இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்பால் அந்நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றதும் அந்நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த பிரபல ஹூண்டாய் கார் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஆதரவாக இருப்போம்’ என பதிவிட்டது. இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் கிளம்பியது. ஹூண்டாய் கார்களை புறக்கணிக்க வேண்டுமென டிவிட்டரில் மக்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர்.