தர்மபுரி : தர்மபுரியில் இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், மாரவாடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(62). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு, ஊன்றுகோலுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து கையில் கோரிக்கை அட்டையை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாகியும், அவர் தர்ணாவை கைவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.