ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின்றி நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் 3ம் கால அபிஷேகத்தின்போது மூலவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம்கோலாகலமாக நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நான்கு மாட வீதிகளில் கோயில் மணி ஒலித்து, 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, 3.45 மணிக்கு திருமஞ்சன சேவையும், அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை, தேவாரம், 4.30 மணி முதல் கால அபிஷேகம் நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் நடந்தது. காலை 7 மணி முதல் 9 மணி வரை கோயில் வளாகத்தில் தங்க கொடி மரம் அருகே உள்ள நடராஜர் சன்னதியில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.