சென்னை: ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்களில் மிகச் சிலர்தான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருதவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள் 109 பேர் அதாவது 5 சதவீதம் பேர் ஆவர். இந்த 109 பேரில் பலர் இணை நோய் உள்ளவர்கள் என்றும் தாமதமாக சிகிச்சை பெற வந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.