ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்: நெரிசலை குறைக்க காவல்துறை ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு இன்று முதல் நாளை வரை (12, 13ம் தேதி) ஆகிய நாட்களில் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

* தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செலலும் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

* பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும்.

* கோயம்பேடு பகுதியில் இருந்து பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்கள் அடைய மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: