திருவனந்தபுரம்: தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் பாலா. அஜித் நடித்த வீரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்து உள்ளார். இவர் கொச்சியை சேர்ந்த அமிர்தா என்ற பாடகியை திருமணம் செய்து விவகாரத்து பெற்றார். பின்னர் 2வது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக கொச்சியில் வசித்து வந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் மோன்சன் மாவுங்கல் இருந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
மோன்சனுடன் அஜித் என்ற டிரைவர் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். மோன்சனுக்கு எதிராக டிரைவர் அஜித் கொச்சி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அஜித்தை தொடர்பு கொண்ட நடிகர் பாலா, மோன்சன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். அஜித்தும், பாலாவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ பரவியதன்மூலம் மோசடி மன்னன் மோன்சனுக்கும் பாலாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாலா கூறியது: நான் கொச்சியில் இருந்த ேபாது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். அவர் செய்த மோசடி குறித்து எனக்கு தெரியாது. அஜித் என்னிடம் வேலை பறிபோய் விட்டது என்று கூறினார். அப்போது தான் அஜித் புகார் அளித்தது தெரியவந்தது. அப்போது அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினேன். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.