பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு ஒரு மாதம் ரத்ததான முகாம்: பாஜக இளைஞர் அணி அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:  பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள், பொதுசேவையில் 20 ஆண்டு நிறைவு ஆகியவை முன்னிட்டு, தமிழக பாஜக இளைஞரணி சார்பில் ”சேவை மற்றும் சமர்ப்பணம்” என்ற பிரசாரம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று முதல் அக்டோபர் 7ம்தேதி வரை நடைபெற உள்ளது.  ஒரு பகுதியாக, மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கடற்கரையில் நடைபெறும் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

நாளை (18ம்தேதி) சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள 710 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். சுதந்திரத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு தியாகிகளின் இல்லங்களுக்கு சென்று மரியாதை செய்யப்படும். அக்டோபர் 2ம் தேதி சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய இடங்களில் தூய்மை பணி நடைபெறும். பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் மக்கள் பணி, சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில்  “மோடி மேளா கண்காட்சி” அந்தந்த மாவட்ட இளைஞரணியினர்  மூலம் நடத்தப்பட உள்ளது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த தினமான செப்.25ம் தேதி பிரதமரின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு விளக்குதல், பிரதமரின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்தல், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: