வசை பாடாமல் புதிய திசையில் பயணிக்க இளைஞர்களுக்கு கை கொடுப்போம்

*இன்று சர்வதேச இளையோர் தினம்

சேலம் : இன்றைய இளைஞர்களை சூழ்ந்துள்ள கலாச்சாரம் மற்றும் சட்ட ரீதியிலான சிக்கல்களை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும், இது குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) சர்வதேச இளையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபை அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், 15முதல் 24வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை (26.9கோடி)  இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் 35 கோடி இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த வகையில் மிக இளமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று.

இளைஞர்களை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் அழிவுப்பாதைக்கும் எளிதில் அழைத்துச் செல்லலாம். நாட்டின் சொத்துக்களாக கருதப்படும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி சீர்மிகு எதிர்காலத்திற்கு வழிகாட்டுவது இந்த நாளின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும், சரியான விகிதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே இளைஞர் நலன் சார்ந்த அமைப்புகளின் கூற்றாக உள்ளது. அதே நேரத்தில் குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, எதிர்வரும் சந்ததியை வழிநடத்திச் செல்லும் கடமையும் இளைஞர்களுக்கு உள்ளது. இதை உணர்ந்து வீறுநடைபோடும் ஆயிரமாயிரம் இளைஞர்கள், இன்று நம்மிடையே உதாரண புருஷர்களாக உள்ளனர்.

 ஆனாலும் சமீபகாலமாக சிலர், இளமைப்பருவத்தில் ஆல்கஹால், புகையிலை, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாகி கிடப்பதாக வேதனைக்குமுறல்கள் வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். இதற்கு மாறாக திறமைகளை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன்னேற வேண்டும். அதன் மூலம் நாட்டையும் முன்னேற்ற வழிவகுக்க வேண்டும். இளைஞர்களின் எண்ணங்கள் தான், நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்றார் மகாத்மாகாந்தி.

ஒருநாட்டின் வளர்ச்சியை மட்டுமல்ல, அது எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியும் இளைஞர்களுக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்பட்டாளம், சமூக வலைதளங்களில் அவர்கள் வீழ்ந்து கிடப்பதாகவும் கருத்துகள் பரிமாறப்படுகிறது. அந்த சமூகவலைதளத்தை கொண்டு எப்படி ஒரு சமூக புரட்சியை உருவாக்க  வேண்டும் என்ற வித்தையும் அவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போராட்டம் இதற்கான அளப்பரிய சான்று. எனவே இந்தநாளில் இளைஞர்களை வசை பாடுவதை தவிர்த்து புதிய திசை நோக்கி பயணிக்க கரம் கொடுப்போம்.

Related Stories: