இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை மகப்பேறு கால இறப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமானது ரத்தப்போக்கு. பிரசவத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ தாய்க்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கால் நிகழும் இறப்புகள் அதிகரித்து வருகிறது. நஞ்சுக்கொடி பிரீவியா, நஞ்சுக்கொடி சீர்குலைவு போன்ற காரணங்களால் இது நிகழ்கிறது. இதேபோல் ஒரு குழந்தையை சுமக்கும் போது பெண்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் நோய் தொற்றுகள் பரவி, தாயின் இறப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் ஒரு பெண் ஏற்கனவே ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், ரத்தஅழுத்த கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பிரசவத்தில் அதிக ஆபத்து உள்ளது. கர்ப்பத்தின் ஆபத்து என்பது வயதுக்கு ஏற்பவும் அதிகரிக்கும்.
இவை அனைத்தும் ஒரு புறமிருக்க கலாச்சார நடைமுறைகள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் சமூகவிதிமுறைகள் தாய்வழி பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் அழுத்தமும், பொருளாதார சூழல்களும் பெண்களுக்கான ஆரோக்கியத்தையும், சிறந்த சிகிச்சையையும் தடுக்கிறது. அதேபோல் ஏழ்மை, கல்வி அறிவின்மை, போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களும் சுகாதார பாதுகாப்புக்கான அணுகலை தடுத்து விடும் முக்கிய காரணங்களாக உள்ளது. தற்போது ஏராளமான அரசு மருத்துவமனைகளில் மகப்பேற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது. ஒன்றிய, மாநிலஅரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் உயர்தரத்திலான நவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதை கர்ப்பிணி தாய்மார்களும், குடும்பத்தினரும் முறையாக பயன்படுத்த வேண்டும். இதன்மூலமும் தொடரும் மகப்பேறு கால இறப்புகளை கணிசமாக நாம் குறைக்க முடியும்.இவ்வாறு மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
The post இந்தியாவில் உயிரிழப்பு 34 சதவீதம் குறைந்தது பிரசவ காலத்தில் தினமும் இறப்பை தழுவும் 800 பேர்: தேசிய விழிப்புணர்வு நாளில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.