சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெருமையை போற்றுகிற வகையில் ‘ராஜிவ்காந்தி கேல் ரத்னா’ விருது வழங்கப்பட்டு வந்தது. உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் 1982ல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு. 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு. இந்தப் பின்னணியில் தான் ‘ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது’ விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.