இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை.: நடிகர் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு

காரைக்குடி: இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை என்று காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். முன்னதாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது? எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாதெனவும் அறிவுறுத்திய நீதிமன்றம் வரி என்பது நன்கொடையல்ல அது கட்டாய பங்களிப்பு எனவும் காட்டமாக கூறியுள்ளது.

அதனை தொடர்ந்து வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சில எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நடிகர் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்பவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது; பிரிக்கவும் காங்கிரஸ் கட்சி விடாது. கொங்கு நாடு என கூறி தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது விஷமத்தனமானது என்று அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Related Stories: