கொரோனா விவகாரத்தை முறையாக கையாளாததால் பிரதமர் மோடி செல்வாக்கு சரிவு

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தை முறையாக கையாளத் தவறியதால், மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கொரோனா 2வது அலையில் உலகிலேயே கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர் இல்லை என நடுத்தெருவில் கண்முன் பலர் தங்கள் சொந்தங்களின் இறப்பை கண்கூடாக பார்க்கின்றனர். கொரோனா நிலைமை இவ்வளவு மோசமானதற்கு, ஜனவரி மாதமே நிபுணர்கள் கூறிய எச்சரிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு காது கொடுத்து கேட்கத் தவறியதுதான். இதனால்தான் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் பாஜ பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் ‘குளோபல் லீடர்ஸ்’ பட்டியிலில் உள்ள பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆகஸ்ட் 2019 முதல் ஜனவரி 2021 வரை நடுத்தர மக்களிடம் ேமாடியின் செல்வாக்கு 80% ஆக இருந்தது. இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த மதிப்பீடு 67% ஆகக் குறைந்துள்ளது. அதாவது மோடியின் செல்வாக்கு 13% அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் உட்பட சில மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், தற்ேபாது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பில், நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்து வந்தனர். ஆனால், இப்போது அவர்கள் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லோக்னிட்டியின் இணை இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘பிரதமர் மோடி மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளார். இவர்களில் நடுத்தர வர்க்க மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் அலுவல் ரீதியான பணியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஆகஸ்டில் 12% ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 28% ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிக கவனம் செலுத்தவில்லை. அவர் மக்களை கைவிட்டுவிட்டார்’ என்றார்.

உயிரை காப்பாற்ற கெஞ்சுகின்றனர்

டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘என்னிடம் ஏராளமான நடுத்தர வர்க்க மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் தந்தை, தாய், குழந்தைகள் அல்லது மனைவியின் உயிரை காப்பாற்ற கெஞ்சுகிறார்கள். பெண் மருத்துவர் ஒருவர், தனது தாயை மருத்துவமனையில் அனுமதிக்க மூத்த மருத்துவர்களிடம் மன்றாட வேண்டி உள்ளது. ரூ. 10 ஆயிரம் கொடுத்தும் ரெம்டெசிவிர் ஊசி பெறமுடியவில்லை’ என்று கோபத்துடன் கூறினார்.

சொந்தங்களை இழக்கின்றனர்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜய் குமார் கூறுகையில், ‘கொரோனா முதல் அலையில் சில இறப்பு செய்திகளை மக்கள் கேள்விப்பட்டார்கள். ஆனால், இப்போது அவர்களது சொந்த குடும்பங்களில் உள்ளவர்களே இறந்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: