நீதிபதிகளின் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய முடியாது: தேர்தல் ஆணைய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: அண்மையில் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இவ்வளவு அதிகமாக கட்டுக்கடங்காமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்  போக்குதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்காக கொலைக் குற்றம் கூட அவர்கள் மீது சுமத்தலாம்’ என கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஏ.எம்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,  ‘கொரோனா பரவலுக்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் கூட சுமத்தலாம்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையானதுதான்.

 நீதிபதிகள் தங்களுக்கான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். மேலும்  பயன்படுத்தப்படும் மொழி குறித்தும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோன்று வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஊடகம் செய்தியாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்  என்பதில் எந்தவித நியாயம் மற்றும் முகாந்திரமும் இல்லை. குறிப்பாக, நீதிமன்றங்களின் நடப்பது குறித்து சேகரிப்பதும் ஊடக சுதந்திரமாகதான் கருதப்படும். அதனை நாங்கள் மிகவும் முக்கியமாக பார்க்கிறோம்.

அதனால் ஊடகம் மீது புகார் நடவடிக்கை எடுப்பது என்பது நல்லதல்ல. குறிப்பாக சர்வதேச நீதிமன்றங்கள் நேரடி ஒளிபரப்பை அனுமதித்துள்ளது’ என தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: