காயத்தால் டொமினிக் தீம் அவதி

பெல்கிரேட்: இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஆஸ்திரியாவின் டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் தீம், காயத்தில் இருந்து குணமடைந்து விடுவேன் என்றும், பிரெஞ்ச் ஓபனில் ஆடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 யுஎஸ் ஓபன் பைனலில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ்வை கடும் போராட்டத்திற்கு பின்னர் 5 செட்களில் வீழ்த்தி, டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார். அப்போதே அவரது இடது முழங்காலில் லேசான உள் காயமும், வலியும் இருந்ததாக செய்திகள் வெளியாகின.

அந்த காயம் சற்று பெரிதானதால், கடந்த வாரம் மோன்டே கார்லோ ஓபன் போட்டிகளில் இருந்து,  அவர் விலகிக் கொண்டார். தற்போது சிகிச்சையில் உள்ள அவர், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் துவங்குவதற்கு முன்னர், முழுவதுமாக குணமடைந்து விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பிரெஞ்ச் ஓபனில் அவசியம் பங்கேற்பேன் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் தற்போது 4ம் இடத்தில் உள்ள டொமினிக் தீம் இது குறித்து கூறுகையில், ‘‘கிராண்ட்ஸ்லாம் போட்டி முக்கியம். இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால் மோன்டே கார்லோவில் இருந்து விலகிக் கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: