ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான் சாவு

ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கத்தில்  உஷா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு நேற்று  மதியம் அருகே உள்ள பெங்கல மூலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி 3 வயது ஆண் மான் ஒன்று வந்தது. மானை கண்ட அங்கிருந்த நாய்கள் அதனை துரத்தின. இதனால், அச்சமடைந்த மான் தென்னந்தோப்பு மற்றும் வயல்வெளிகளில்  ஓடியது. மேலும், நாய்கள் மானை துரத்தி செல்வதை கண்ட அங்கிருந்தவர்கள் நாய்களை கல்லால் அடித்து துரத்தினர். தொடர்ந்து மானை அப்பகுதி மக்கள் பிடித்தனர். அப்போது, மானுக்கு காயம் ஏற்பட்டது தெரிந்தது.

தொடர்ந்து, ஆம்பூர் வன சரக அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் நடராஜன் மற்றும் வனத்துறையினர் மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறுது நேரத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, மானின் சடலம் பிரேத பரிசோதனைக்கு வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

Related Stories: