புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் 30 எம்எல்ஏக்கள் என்ற அடிப்படையில் 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து கொள்ளலாம். அதன்படி கடந்த காலங்களில் மாநில அரசு பரிந்துரைக்கும் பெயர்களை ஏற்றுக்கொண்டு 3 பேரை நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை 2011ம் ஆண்டு மத்திய அரசு திடீரென மாற்றியமைத்தது. ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தனது கட்சிக்காரர்கள் மூன்று பேரின் பெயர்களை நியமன எம்எல்ஏக்களாக பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். இதனை உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. இதன்பின், 3 நியமன எம்எல்ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்களையே மத்திய அரசு நேரடியாக நியமித்தது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் நியமன எம்எல்ஏக்கள் முதன்முறையாக வரும் 22ம் தேதி வாக்களிக்க சபாநாயகர் அனுமதிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வாக்களிக்கும் உரிமை இல்லை, இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் துணை நிலை ஆளுநர் தமிழிசை நியமன எம்எல்ஏக்களை பாஜகவினராக சேர்த்து 14 என கணக்கிட்டே ஆளும் அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
நியமன எம்எல்ஏக்கள் கட்சி சாராதவர்களாகவே இருக்க வேண்டும். துணை நிலை ஆளுநர் அலுவலகமே பாஜக என எதிர்க்கட்சி வரிசையில் சேர்த்துள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் தற்போது எம்எல்ஏக்களின் பலம் 28 ஆக இருக்கிறது. காங்கிரஸ்- 10, திமுக-3, சுயேட்சை-1( சபாநாயகர் உட்பட), என். ஆர் காங்கிரஸ்- 7, அதிமுக-4, பாஜக- 3 என எதிர்கட்சிகளின் பலமும் 14 என சமபலத்தில் இருக்கிறது. இது போன்ற சூழலில் சபாநாயகரின் வாக்கு முன்கூட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
வரும் 22ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆளும் காங்கிரசுக்கு 13 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் எதிர்கட்சிகள் 11+3 பேர் ஆதரவுடன் மெஜாரிட்டியாக இருப்பார்கள். எதிர்கட்சிகளில் ஏதேனும் ஒரு எம்எல்ஏ ஆப்சென்ட் ஆனால், சபாநாயகரின் வாக்கினை பெறும் ஆளும் அரசு வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைக்கும். ஏற்கனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அஜெண்டாவும் இடம்பெறக்கூடாது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளதால், இதனை மீறி சபாநாயகர் வேறு ஏதேனும் உத்தரவு போடுவாரா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் பங்கு மிக மிகுந்த முக்கியத்துவத்தும் பெற்றுள்ளது.