புதுடெல்லி: இந்திய விமானப்படைக்காக 70 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் பறந்து தாக்குதல் நடத்தும் அதிநவீன டிரோன் தயாராகி வருகிறது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டு பாதுகாப்புக்காக தற்போது புதிதாக டிரோன் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களின் முக்கிய எதிரிகளை இந்த ஆளில்லா டிரோன்கள் மூலமாகவே தாக்கி அழித்து கொண்டிருக்கின்றன. உளவு பார்ப்பது, ஆயுதங்களை சப்ளை செய்வது, வெடிகுண்டுளாக மாறி தாக்குதல் நடத்துவது, சிறிய ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது உட்பட பல்வேறு போர் வியூகங்களுக்கு டிரோன் பயன்படுத்தப்படுகிறது. உலகின் அபாயகரமான ஆயுதமாக இது மாறி வருகிறது. இந்திய ராணுவத்திலும் டிரோன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்காக, மிகவும் அதிநவீன ஆளில்லா டிரோன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.