புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்தோரை நினைவு கூறும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்படுவது வழக்கமாகும். பொதுவாக, அரசு அலுவலகங்களில் மட்டுமே இது பின்பற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒட்டுமொத்த மக்களும் 2 நிமிடம் தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
* தியாகிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
* சரியாக, 10.59 மணி முதல் 11 மணி வரை சைரன் ஒலிக்க செய்ய வேண்டும்.* அப்போது, அனைத்து பணிகளும் நிறுத்தப்பட வேண்டும்.* இரண்டு நிமிடங்கள் கழித்து மவுன அஞ்சலி செலுத்திய பிறகு, 11.02 முதல் 11.03 வரை சைரன் ஒலிக்க செய்ய வேண்டும். * சைரன் ஒலி கேட்டவுடன் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். * சைரன் வசதி இல்லாத இடங்களில் தகுந்த ஏற்பாடு மூலமாக இந்த நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.