டெல்லி :விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம், அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, தலைநகர் டெல்லி எல்லைகளில் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு, கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.பலமுறை விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் மீண்டும் மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் மத்திய அரசின் இந்த அழைப்பை விவசாயிகள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.