மக்கள் பிரதிநிதிகள் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து மனு: விளக்கம் கேட்டு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது விளக்கம் அளிக்ககோரி மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பெங்களூருவில் இயங்கி வரும் பீப்புல்ஸ் யூனியன் பார் சிவில் லிபிரிட்டில் (பியுசிஎல்) அமைப்பு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மக்கள் பிரதிநிதிகள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருக்கும் 62 கிரிமினல் வழக்குகளை ரத்து செய்து முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது சட்டப்படி சரியான நடவடிக்கை இல்லை. கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்தில் மூலம் தான் இறுதி செய்யப்பட வேண்டும். ஆகவே கிரிமினல் வழக்குகளை ரத்து செய்து எடுத்துள்ள முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அம்மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கிளிப்டன் ரோஜாரியா வாதம் செய்தார்.மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இது குறித்து விளக்கம் அளிக்ககோரி மாநில தலைமை செயலாளர், மாநில உள்துறை முதன்மை செயலாளர், மாநில சட்டத்துறை முதன்மை செயலாளர், அரசு தலைமை வக்கீல் மற்றும் மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Related Stories: