காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்

திருமலை: காதலித்து 60 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் பகுதியை சேர்ந்தவர் சமிதா நாயக்(80). அதே பகுதியை சேர்ந்தவர் சமிதா கோகுலோத் லாலி (70). இருவரும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி குறிப்பாக ஏப்ரல் மாதம் 28ம் தேதி கோயிலில் மாலை மாற்றிக்கொண்டனர். இதையடுத்து இருவரும் கணவன், மனைவியாக அதே ஊரில் வாழ்ந்து வந்தனர். தற்போது தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அவர்களுக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இந்து முறைப்படி அவர்கள் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டாலும் வழக்கமான இந்து திருமணங்களைப் போல் அல்லாமல் அவர்கள் திருமணத்தில் தாலி கட்டிக் கொள்ளவில்லையாம். இதனால் பல ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்திய போதிலும் தனது கழுத்தில் கணவர் கட்டிய தாலி இல்லையே என்று கோகுலோத் லாலி மனம் வருந்தினார். அதை ஈடு செய்யும் வகையில் மகன், மகள், பேரக்குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிக்கு இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்காக இருவரும் மாலை மாற்றிக்கொண்ட அதே தேதியான ஏப்ரல் 28ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனடிப்படையில், நேற்று முன்தினம் பந்தல் அமைக்கப்பட்டு இசை வாத்தியங்கள் இசைக்க புரோகிதர் முன்னிலையில் சமிதா நாயக் அவரது மனைவி கழுத்தில் தாலி கட்டினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: