திருக்கழுக்குன்றம் அருகே சோகம் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே குட்டையில் குளிக்கும்போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமம், மலை மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். பெயின்டர். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), லித்தீஷ் (9) ஆகிய மகன்கள் உள்ளனர். லித்தீஷ், கருமாரப்பாக்கத்தில் உள்ள  அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த சில நாட்களாக திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதையொட்டி, கருமாரப்பாக்கத்தில் உள்ள ஒரு குட்டையும் மழைநீரல் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம், சிறுவன் லித்தீஷ், தமிழ்செல்வன், அதே பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களுடன் மேற்கண்ட குட்டைக்கு சென்று குளித்தனர். அப்போது லித்தீஷ், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால், நீச்சல் தெரியாமல் தண்ணீரில்  தத்தளித்தான். இதை பார்த்த மற்ற சிறுவர்கள், அலறி கூச்சலிட்டனர்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து  குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அங்கு லித்தீஷை பரிசோதித்த   மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: