உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாக்குக்கு உணர்த்தியாய் பழமொழி கண்டுபிடித்து வைத்திருக்கும் கூட்டம் நாம். உலக அளவில் உப்பைக் கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்து உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து கல்லா கட்டிய பழங்கால சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? யெஸ்! அது உண்மைதான். கடலும் கடல் சார்ந்த பகுதியையும் நெய்தல் எனச் சொல்லும் நம் மரபு, அந்தப் பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உப்புக் காய்ச்சும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தோம். சங்க இலக்கியங்கள் உமணர் எனப்படும் உப்பு வியாபாரிகள், உப்புத் தொழில் செய்வோர் பற்றி பல நூறு குறிப்புகள் உள்ளன. உலக அளவில் தமிழர்கள், கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோர்தான் பல ஆயிரம் ஆண்டுகளாய் உப்புத் தொழில் நுட்பம் அறிந்தவர்களாய் இருக்கிறோம். உலக வரலாற்றையே மாற்றிய பெருமை உப்புக்கு உண்டு. பல போர்கள் உப்பினாலேயே அதன் வணிகத்தினாலேயே நடைபெற்றிருக்கின்றன. பண்டமாற்று முறையில் காசுக்குப் பதிலாக உப்பைக் கொடுத்து வாங்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது. இப்போதுகூட நம் பண்பாட்டில் உப்பு என்பது லட்சுமி அதாவது செல்வம் என்றே போற்றப்படுகிறது. உப்பைக் கொடுத்து தங்கம், தந்தம், தோல், மிளகு, சர்க்கரை, கோலா கொட்டைகள், மணிகள் போன்றவை மட்டுமல்ல அடிமைகளைக்கூட வாங்கியிருக்கிறார்கள். இப்படி, அடிமையாக வாங்கியவர்களை உப்பளங்களில் பணிக்கு அமர்த்தி உப்பு உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். மார்க்கோ போலோ எழுதிய வரலாற்றுக் குறிப்பில் பேரரசர் முகம் பதிக்கப்பட்ட உப்புக் கட்டிகள் அமோல் என்ற நாணயமாக பயன்படுத்தப்
பட்டது என்கிறது. பிற்காலத்தில் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு உப்பை செலவாணியாகக் கொடுப்பது நின்றுபோனது.