நாகை: நாகை மாவட்டத்தில் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரண்டு கொள்முதல் நிலையத்தை மட்டுமே ஆய்வு செய்துவிட்டு மத்திய குழு சென்றது. இதனால், விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடந்துள்ளது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் பெறப்படுவதை தடுக்கவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய மத்தியகுழு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி யாதேந்திரஜெயின் தலைமையிலான குழுவினர் நேற்று நாகைக்கு வந்தனர்.