பயணிகள் கூட்டத்துக்குள் பஸ் புகுந்து ஒருவர் பலி

ஜலகண்டாபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் வழியாக மேட்டூருக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் மேட்டூர் நோக்கி வந்தது. பஸ்சில் தாரமங்கலத்தை சேர்ந்த ராஜசேகர் (44) டிரைவராகவும், அசோக்குமார் (31) கண்டக்டராகவும் இருந்தனர். இந்த பஸ் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்து, பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. பயணிகளை தூக்கி வீசியபடி, கட்டிடத்தின் பில்லர் மீது பயங்கரமாக மோதி நின்றது. அப்போது மகளை வழியனுப்ப வந்திருந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (58) உடல் நசுங்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குபதிந்து டிரைவர் ராஜசேகரை பிடித்து விசாரிக்கின்றனர்.

The post பயணிகள் கூட்டத்துக்குள் பஸ் புகுந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: