திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் மாந்தோப்புக்கு எதிரில் உள்ளது செல்லி அம்மன் கோயில். இக்கோயில் அருகே கிழக்கு பகுதியில் சுமார் 4 ஏக்கர் 20 சென்ட் பரப்பில் குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றி கரை அமைத்ததாக கடந்த 2 ஐந்து ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தை பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை யாரும் தூர்வாரும் இல்லை. கரையை பலப்படுத்தவும் இல்லை. தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுயநல பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த அரசு நீர்நிலையில் 100 நாள் வேலையாட்கள் கூட சுத்தப்படுத்தும் பணி செய்யப்படுவது இல்லை.எனவே இந்த அரசு நீர்நிலையை தூர்வாரி கரை கட்டி நீர் தேக்கம் செய்வதன் மூலம் கிராமத்தின் நீர் வளமும் பெருகும். இது மட்டுமின்றி இதில் மீன் வளர்ப்பு செய்வதன் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும்.எனவே குட்டையை முறையாக தூர்வாரி, கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.