சென்னை: திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.