காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பிளஸ் 2 மறுதேர்வு தொடங்கியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிளஸ் 2 மறுதேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டது. இதனால் மார்ச் 26ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் , புவியியல் பாட தேர்வுகளை சில மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே மறுதேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு எழுதினர். இதையொட்டி  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 21 மையங்களில் நடந்த தேர்வில், மொத்தம் 76 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு அறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: