கயத்தாறு: கயத்தாறு அருகே உடல் எரிந்த நிலையில் மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தது யார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தவுடுதாங்கிகுளம் வயல்பகுதியில் ஆள்நட மாட்டம் இல்லாத காட்டு பகுதியில் உடல் எரிந்த நிலையில் மனித எலும்பு கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கயத்தாறு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த நபர் ஆணா? பெண்ணா என்பது தெரியவில்லை. 15 நாட்களுக்கு முன் உடல் எரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
