திருப்பதி : திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. திருப்பதி மலையில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், தற்போது திருப்பதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.