மாட்ரிட்: குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை நடத்துவது வீரர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடும் நெருக்கடியை உண்டாக்கும் என்று நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ் ஓபன் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கும் என ஏடிபி அறிவித்துள்ளது. ‘இப்படி அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் தொடர்களை நடத்துவது சரியல்ல. இதனால் வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். குறிப்பாக, மூத்த வீரர்களுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அட்டவணை தயாரிப்பில் ஏடிபி இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஸ்பெயின் நட்சத்திரம் நடால் தெரிவித்துள்ளார்.