ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை

பூந்தமல்லி: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று ஆட்டோவில் பையுடன் வந்த ஒருவர், ‘‘நான் சுகாதாரத்துறை ஊழியர். ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்,’’ என அங்கிருந்த காவலாளியிடம் கூறியுள்ளார். இதனால், அந்த நபரை காவலாளி உள்ளே அனுமதித்தார். அப்போது அந்த நபர், ‘‘கிருமி நாசினி தெளிக்கும் வரை வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்,’’ என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர், ஆட்டோவில் ஏறி சென்று விட்டார். இதையடுத்து, காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் மெஷின் திறந்து கிடந்தது. இதுகுறித்து அவர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது, மெஷினில் இருந்த ₹13 லட்சம் மாயமானது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, கிருமி நாசினி தெளிப்பது போல் வந்த நபர், ஏடிஎம் மெஷினில் சாவியை  போட்டு திறந்து அதிலிருந்த பணத்தை தனது பைக்குள் வைத்து எடுத்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: